பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பாதங்களைப் பாதுகாக்கும் ஆக்ஸிஜன்

சர்க்கரை நோயாளிகளின் பாதங்களில் ஏற்படும் புண் (foot ulcer) அல்லது கால்களில் ஏற்படும் காயம் அவ்வளவு சீக்கிரத்தில் ஆறுவதில்லை. பல நேரங்களில் இது வேறு பல சிக்கல்களுக்கும் வழி வகுக்கிறது. சுத்தமான ஆக்சிஜனை செலுத்தும் இந்த  ஹைபர்பேரிக் ஆக்சிஜன் தெரபி (hyperbaric oxygen therapy HBOT) என்கிற புதிய முறை  மூலம் பாதங்களின் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்க முடியும்" என்கிறார், சென்னை ராயபுரம் எம்.வி. டயாபடிக் மையத்தின் இயக்குநர் டாக்டர். விஜய் விஸ்வநாதன்.

மேலும் புண், காயம் ஏற்பட்ட பகுதியில் ரத்த ஓட்டம் குறைந்து ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காதபோது, காயங்கள் ஆறுவது தாமதமாகிறது. சுத்தமான ஆக்சிஜன் நிரம்பியுள்ள பிரத்யேக அறையில் நோயாளியை வைத்து 100 சதவிகிதம் ஆக்சிஜனை சுவாசிக்கச் செய்கிறோம் (பொதுவாக நாம் சுவாசிக்கும் போது 21 சதவிகித ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்கிறோம்). அப்போது புண் ஏற்பட்ட பகுதியில் புதிய ரத்த நாளங்கள் உருவாக, இந்த அதிகப்படியான ஆக்சிஜன் தூண்டுகிறது. உடலில் உள்ள எல்லா உறுப்புகள், திசுக்களுக்கு அதிக ஆக்சிஜன் கிடைப்பது போல புண் ஏற்பட்ட இடத்திலும் அதிகப்படியான ஆக்சிஜன் கிடைத்து, புண்கள் வேகமாக ஆறுவதற்கு உதவுகிறது. வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகள் விரைவாக அழிக்கப்பட்டு, உடலில் உள்ள நச்சுத்தன்மை குறைகிறது.



நோயாளிகள் தினமும் ஒரு மணி நேரம் என்று 14 நாட்களுக்கு தொடர்ந்து இந்தத் தெரபியைப் பெற வேண்டும். ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் கட்டணம். தினமும் ஆறு பேருக்கு சிகிச்சை தர முடியும். இவர்களில் பொருளாதார நிலையில் பின்தங்கிய, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவருக்கு இலவச சிகிச்சை தரப்படும். இதற்கு குறிப்பிட்ட அரசு மருத்துவமனை டீனின் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்" என்கிறார்.

சாதாரண சூழலில் இருப்பதைவிட ஆக்சிஜன் உள்ள பிரத்யேக அறையில் காற்றின் அழுத்தம் இரண்டரை மடங்கு அதிகமாக இருக்கும். அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் காயங்கள், மூளையில் ஏற்படும் காயம், கதிரியக்கத்தால் ஏற்படும் பாதிப்பு, கனமான பொருள் நசுக்கியதால் ஏற்பட்ட காயம், திடீரென ஏற்படும் காது கேளாமை போன்ற பிரச்சினைகளுக்கும் இந்த ஆக்சிஜன் தெரபி பலன் தரும் என்கிறார்கள் டாக்டர்கள். அதே நேரத்தில், இந்தத் துறையில் பயிற்சி பெற்ற திறமையான டாக்டர்கள் மேற்பார்வையில், பாதுகாப்பான மருத்துவச் சூழலில் மட்டுமே இதுபோன்ற தெரபியை செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது நேரடியாகப் புண்களை ஆற்றுவதில்லை. அதற்கு உதவுகிறது" என்கிறார், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் டாக்டர். ஜார்ஜ் எம்.வர்கீஸ்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால்களில் புண் ஏற்பட்டால் சிகிச்சை, அதற்கான செருப்புகள் என்று மாதம் 20 ஆயிரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆக்சிஜன் தெரபி முறை இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று நம்புவோம்.

ஆக்சிஜன் செல் வளர்ச்சியை தூண்டுகிறது.

பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளை அழிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைக் குறைக்கிறது.

உடலில் உள்ள நச்சுத் தன்மையைக் குறைக்கிறது.

முழுக்க ஆக்சிஜன் நிரம்பிய அறையில், போதுமான அழுத்தத்திற்கு உட்பட்டு 100 சதவிகிதம் ஆக்சிஜனை சுவாசிக்கச் செய்வதற்க்கு பேர் HBOT

இதனால் உடலில் உள்ள எல்லா திசுக்களிலும் ஆக்சிஜனை அதிகப்படுத்துகிறது. ரத்த ஓட்டம் குறைவான இடத்தில், புதிய ரத்தக் குழாய்கள் உருவாகத் தூண்டுகிறது. அடைப்பு உள்ள ரத்தக் குழாய்களில் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்த உதவுகிறது.

                                                  ---நன்றி புதியதலைமுறை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக