பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

ரீ-யூனியன்தீவு

தமிழ்நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம் தமிழ் நாட்டில் பலர் கேள்விப்படாத இடம் ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப்பகுதி ஒன்று. சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன்! சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு, ஆப்பிரிக்ககண்டத்திற்கு கிழக்கே – இந்து மகா கடலில்,மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு. பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத்தொலைவில் இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி. உலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும் இடங்களில் ஒன்று – இந்த ரீயூனியன்தீவு…!!!


சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 45கிலோமீட்டர் அகலமும் உள்ள மொத்தமாக 2500 சதுரகிலோமீட்டர் பரப்பளவே உள்ள இந்ததீவின் மொத்த மக்கள்தொகை சுமார் எட்டரை லட்சம். அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு சுமார் ஒன்றரை லட்சம்….!!! 170-180 ஆண்டுகளுக்கு முன்னால் பிழைப்பு தேடி தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றதமிழர்களின் சந்ததியினர் இவர்கள். உலகில் தமிழகத்திற்கு வெளியே சென்ற தமிழர்களில் மிகவும் மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும், சாதியப் பாகுபாடுகளில்லாமல் சம உரிமை பெற்று வாழ்கின்றவர்களில் இவர்களே முதன்மையானவர்கள்…!!!

பாண்டிசேரி பிரெஞ்சுப் பிரதேசமாக இருந்தபோது 1827 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 25வருடங்கள் தொடர்ச்சியாக, பாண்டிச்சேரி, காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், போன்றபகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் அப்போதைய நாட்களில் ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்த ரீ யூனியன் தீவில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச்செல்லப்பட்டார்கள். இரண்டும் பிரெஞ்சுப் பிரதேசங்களாக இருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை…..!!

சிலர் இலங்கையில் (யாழ்ப்பாணம்)) இருந்தும் குடியேறினார்கள். இப்போது உள்ளவர்களில் பலர் அவர்களின் சந்ததியினர். ஆரம்பத்தில் ஒப்பந்தக்கூலியாக அழைத்துச் செல்லப்பட்டாலும், பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவர்கள் அத்தனை பேருக்கும் பிரெஞ்சு குடியுரிமை அளித்து கௌரவமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றுக்கொண்டது. இவர்கள்அனைவரும் இன்று சமஉரிமை பெற்று மகிழ்ச்சியான பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கிறார்கள். பிரெஞ்சுத் தமிழர்கள்என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள்….!

ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரங்களுடன் ஒன்று கலந்து விட்டாலும், இன்னமும் இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில், தமிழ்ப்பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள். தைப்பூசம், பங்குனி உத்திரம், காவடியாட்டம், கரகாட்டம், காளியம்மன், முருகன், சிவன்எல்லாம் இவர்களை இன்னமும் தமிழுடன் இணைத்து வைத்திருக்கின்றனர்…!

அத்தனையையும் இப்போதும் விடாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரம் இருந்தாலும், வீட்டுக்குள் இன்னமும் தமிழ் வாழ்கிறது. தமிழ் நாட்டிலிருந்து கலாச்சார தொடர்பை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு தாய்த் தமிழகத்திடம் உள்ள ஒரே வேண்டுகோள் – அவர்களுக்கு தமிழும், இசையும், நடனமும், இலக்கியமும் கற்றுத்தர தாய்த்தமிழகம் உதவ வேண்டும் என்பது தான் !!

அற்புதமான இயற்கை வளம் நிரம்பியது ரீயூனியன் . இதுவரை 100 முறைகளுக்கு மேல் நெருப்புக் குழம்பைக் கக்கியுள்ள இரண்டு எரிமைலைகள் இந்த தீவின் சிறப்பம்சம் – ஒன்று சுமார் 2600 மீட்டர் உயரமுள்ளது. மற்றொன்று 3200 மீட்டர் உயரமுள்ளது. இந்த எரிமலைகளின் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. ரீ யூனியனின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் அதன் மழை வளம்….! 1966 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிக்கு இடைப்பட்ட 24 மணி நேரங்களில், இங்கு 1,870 மில்லிமீட்டர் (சுமார் 73.6இஞ்ச் ) மழை பெய்தது ஒரு உலக ரெக்கார்டு – இதுவரை முறியடிக்கப்படவில்லை.

                                                              --- நன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக