பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 26 மே, 2017

அக்பரும் பீர்பாலும் - பொறாமை

அரசர் அக்பரிடம், பீர்பாலுக்கு மிக்க செல்வாக்கு இருப்பதைக் கண்ட அரசவை அமைச்சர்களுக்கு மிகுந்த பொறாமையாக இருந்தது. அதனால் எப்படியாவது அரசரிடமிருந்து பீர்பாலை பிரித்துவிட வேண்டும் அல்லது ஒழத்து விட வேண்டும் என சதி திட்டம் தீட்டினார்.

இந்த திட்டம் நிறைவேற வேண்டுமானால் அரசருக்கு நெருங்கிய ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு யாரை பயன்படுத்துவது என்று யோசித்து அரசருக்கு முடி திருத்தும் ஒரு பணியாளரைத் தேர்ந்தெடுத்தனர்.

அவனுக்கு பொன்னும் – பொருளும் அளிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி அவரை சம்மதிக்க வைத்து, அதற்கான இரகசிய திட்டத்தையும் கூறி, அதனை நிறைவேற்றினால் மேலும் பொன்னும் – பொருளும் அளிப்பதாகக் கூறினார்.

ஒரு நாள் அரசருக்கு முடி திருத்தம் செய்வதற்காக நிரந்தரமாக தம்மிடமுள்ள முடித்திருத்தம் செய்யும் பணியாளருக்கு அழைப்பு வந்தது.

அரசரின் அழைப்புக்காகவே காத்திருந்த அந்த முடி திருத்தும் பணியாளர். அமைச்சர்கள் சொல்லிக் கொடுத்தபடி தம் சதித்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலானார்.

அரச பெருமானே, தங்கள் முடியும், தங்களின் தந்தையாரின் முடிக்கு நிகரான அழகு பொருந்தியது என்று தான் சொல்ல வேண்டும் என்றார் முடி திருத்துபவர்.

அவ்வளவு அழகானதா? அது எப்படி தங்களுக்குத் தெரியும் என்றார் அரசர். எனக்குத் தெரியும் அரசே, ஆனால் தாங்கள் தங்களின் தந்தையின் மீது அக்கரை காட்டுவதில்லை போல் தோன்றுகிறது. பாவம் மாமன்னரின் முடி வளர்ந்து அவருடைய கம்பீரத்தையே கெடுத்து விட்டது என்றார் முடி திருத்துபவர்.

என்ன பணியாளரே, உமக்கு புத்தி பேதலித்து விட்டதா? என்ன பேசுகிறாய்? என் தந்தை இறந்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்பது உனக்கு தெரியாதா? இறந்து போன ஒருவரை எப்படி நலம் விசாரித்து வரமுடியும்? என்றார் அவர்.

முடியும் அரசே, முடியாதது என்று எதுவும் இல்லை, தாங்கள் மனது வைத்தால் அரசே, என்றார் முடி திருத்துபவர்.

அது எப்படி சாத்தியமாகும்? என்றார் அரசர்.

எனக்கு நன்கு பழக்கப்பட்ட மந்திரவாதி ஒருவர் இருக்கிறார். அவர் உயிருடன் ஒருவரை பாடையில் வைத்து மயானத்திற்கு எடுத்துச் சென்று சக்தியுள்ள மந்திரங்களை ஓதி உடலை எரிப்பார்.

ஆனால் தீ அந்த உடலை எரிக்காது. எரிப்பது போல் நமக்குத் தோன்றும். ஆதலால் உயிருடன் நேராக சொர்க்கத்திற்குச் சென்று நம்முடைய சொந்தக்காரரைச் சந்தித்துவிட்டு வரலாம். இதற்கு நல்ல நம்பிக்கையான ஆள் ஒருவர் இருக்க வேண்டும் என்றார் முடி திருத்துபவர்.

நீங்கள் கூறுவது போல் செய்ய நம்பிக்கைக் குரியவர் எவர் இருக்கின்றார்? என அரசரி யோசனையில் ஆழ்ந்தார்.

அரச பெருமானே, இதற்காக ஏன் யோசிக்கின்றீர்கள்? தங்களின் வாக்கை வேதமாக ஏற்று செயல்படுவதற்கு திறமையான நமது அமைச்சர் பீர்பால் இருக்கின்றாரே, அவரை விட சிறந்த நம்பிக்கைக்குரியவர்கள் எவரும் கிடையாது என்றார் முடி திருத்துபவர்.அரசருக்கு முடி திருத்துபவர் சொல்வது சரியென நினைத்து இதற்கு பீர்பால் ஏற்றவர் அவரையே அனுப்பி வைக்கலாம் என்றார் அரசர்.

மறுநாள் காலை அரசவை கூடியது பீர்பால் உட்பட எல்லா அமைச்சர்களும் வந்திருந்தனர். அரசர் பீர்பாலை அழைத்து தன் விருப்பத்தைக் கூறினார். இக்காரியத்தைச் செய்ய தங்களை விட சிறந்தவர் வேறு எவரும் இல்லை. ஆதலின் தாங்கள் சொர்க்கத்திற்குச் சென்று என் தந்தையாரின் நிலையை அறிந்து வர வேண்டும் என்றார் அரசர்.