பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 3 ஜூலை, 2017

சேஷாத்திரி மலை -பெயர் காரணம்

திருப்பதி வெங்கடேசப்பெருமாள் ஏழு மலைகளுக்கு அதிபதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார். ஏழு மலைகளைக்கொண்டு இருப்பதால், ஏழுமலை என்றும் அழைப்பார்கள். இது ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிப்பதாக ஐதீகம். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்ரி, நாராயணாத்திரி, வேங்கடாத்திரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும். சேஷாத்திரி மலை, சேஷாசலம் என்று பல பெயர்களில் திருப்பதி மலையை அழைக்கின்றோம். திருப்பதிக்கு `சேஷாத்திர மலை' என்று பெயர் வந்த காரணம் ரொம்பவே சுவாரஸ்யமானது. யுகங்கள் பலவாகியும் சேஷாத்திரி மலை என்ற புகழுடன் திகழ்கின்றது.

பெயர் காரணம் :

முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் ஒரு வாதம் ஏற்பட்டது. ஒருவரைவிட மற்றவர் பலசாலி என அவ்விருவரும் வாதிட்டுக்கொண்டனர். அச்சமயத்தில் கடவுளின் திருநாமத்தை ஜபித்துக்கொண்டு நாரதர் அவ்விடம் வந்து சேர்ந்தார். அவர்களின் சண்டையை அவர் கேட்டு,

'அன்பர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு சண்டை போடுகிறீர்கள். நீங்கள் இருவருமே பலசாலிகள். உங்களில் யார் மிகப் பலசாலி என்ற விஷயத்தை அறிய ஆவலானால், நான் உங்களுக்கு ஒரு உபாயம் சொல்கிறேன் கேளுங்கள்: 'ஆதிசேஷனே! நீ மேரு பர்வதத்தின் குமாரரான ஆனந்த பர்வதத்தை வலம் வருவாயாக! வாயு தேவனே! ஆதிசேஷன் வலம்கொண்ட ஆனந்தபர்வதத்தை உனது வலிமையால் அசைப்பாயாக! உன்னால் அசைக்க முடியுமானால் நீதான் பலசாலி, இல்லையேல், ஆதிசேஷன் பலசாலி” என்றார். நாரதர் சொன்ன இந்த யோசனை அவ்விருவர்களுக்கும் பிடித்தது. உடனே ஆதிசேஷன் ஆனந்த பர்வதத்தை வலமாகச் சுற்றிக் கொண்டார். வாயுதேவன் தனது வலிமையையும், முழுமையையும் காட்டி அந்தப் பர்வதத்தை அசைக்க முயன்றார்; ஆயினும் அசைக்க முடியவில்லை. இரவும் பகலுமாக புயல் காற்றாக வீசிக்கொண்டிருந்தான் வாயுதேவன். ஆதிசேஷனும் விடாப்பிடியாக இருந்து பருவதத்தைப் பலமாகப் பிடித்துக்கொண்டான்.



வாயுதேவனின் வலிமை மிகவும் பயங்கரமானது. வீசிய காற்று புயலாக மாறியது. இதனால், எல்லா உலகங்களும் நடுங்கிவிட்டன. எல்லாப் பிராணிகளும் மிகவும் கஷ்டப்பட்டன. ஆதிசேஷனும், வாயுதேவனும் அவரவர் முயற்சியைக் கைவிடவில்லை. இவ்வாறு சில நாள்கள் இந்த பிடிவாதப் போட்டியில் கழிந்தன. ஏழு உலகங்களும் ஸ்தம்பித்துப்போயின பூமியின் இயக்கம் யாவும் நின்று போனது. மண்ணுலகின் உயிர்களெல்லாம் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாயின.

இதைப் பார்த்து இந்திரன் முதலிய தேவர்கள் அங்கு வந்தனர்.

தேவேந்திரன் ஆதிசேஷனை நோக்கி 'சுவாமி! இது நியாயமா! பசுக்கள் சண்டையிடுவதால், இடையில் உள்ள கன்றுகள் கஷ்டப்படுவது நியாயமா? உங்கள் சண்டையால் எல்லா உலகங்களும் கஷ்டப்படுகின்றன. வாயு தேவனின் கோபத்துக்கு பிராணிகள் ஆளாக முடியுமா? ஆகையால் நீ எங்களைப் பார்த்தாவது உன் முயற்சியைக் கைவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

தேவர்களின் விண்ணப்பத்துக்கு இணங்கி, ஆதிசேஷன் ஆனந்த பர்வதத்தில் உள்ள தன் பிடிப்பை சிறிது தளர்த்தினான். இதுவே நல்ல தருணம் என்று எண்ணிய வாயுதேவன், ஆனந்த பர்வதத்தை மேலே தூக்கி எறிந்துவிட்டார். அங்கேயிருந்த அந்தப் பர்வதம் பூலோகத்தில் வராகக்ஷேத்திரம் எனும் இடத்தில் விழுந்தது. இப்போதிருக்கும் திருப்பதி பகுதிதான் அது. ஆதிசேஷன் மூலமாக வந்த காரணத்தால், அந்த மலைக்கு சேஷாத்திரி (சேஷன் மலை) என்ற பெயர் வந்தது.


                                                            ---நன்றி விகடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக